×

அமாவாசையை முன்னிட்டு டாஸ்மாக் கடைக்கு பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழித்த ஊழியர்: இதுக்குமா! என்று குடிமகன்கள் ஆச்சர்யம்

பூந்தமல்லி: வானகரத்தில் அமாவாசை முன்னிட்டு டாஸ்மாக் மதுபானக் கடைக்கு பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழிக்கப்பட்டதைக் கண்ட குடிமகன்கள் இதுக்குமா! என்று ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர். சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை வானகரம் பகுதியில் அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது. இந்த கடை நேற்று மதியம் 12 மணியளவில் வழக்கம்போல் திறக்கப்பட்டது. அப்போது பாரில் வேலை செய்யும் நபர் ஒருவர் அமாவாசை என்பதால் தேங்காய், எலுமிச்சை, பூசணிக்காய் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வந்து கடையின் முன்பாக வைத்தார். பின்னர், தட்டில் கற்பூரம் ஏற்றி டாஸ்மாக் கடைக்கு திருஷ்டி கழித்தார். கடைக்கு மட்டுமின்றி கடையை ஒட்டி இருந்த பாரில் மது குடித்துக் கொண்டிருந்த மதுப்பிரியர்களுக்கும் சேர்த்து அவர் திருஷ்டி சுற்றினார்.

திருஷ்டி கழிக்கப்படுவதைக் கண்டு மதுப்பிரியர்கள் சிலர் புன்னகைத்தனர். மதுபானங்கள் அதிகளவில் விற்க வேண்டும் என்பதற்காகவும், அதை வாங்கிப் பருகும் மதுப்பிரியர்களின் உடல்நலம் ஆரோக்கியமா இருக்க வேண்டும் எனவும் வேண்டிக்கொண்டு இந்த திருஷ்டி சுற்றி கழித்ததாக அந்த நபர் கூறினார். வெயில் காலத்தில் குறிப்பாக பீர் வகை மதுபானங்கள் அதிகளவில் விற்பனையாவதால், அதன்மீது விழுந்துள்ள கண் திருஷ்டி கழிய வேண்டும் என்ற நோக்கத்தில் இதை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அமாவாசையை முன்னிட்டு நிறுவனங்கள், வீடுகள், வாகனங்களுக்கு திருஷ்டி கழிக்கப்படுவது வழக்கம் என்றாலும், டாஸ்மாக் கடைக்குமா? என குடிமகன்கள் ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பினர்.

The post அமாவாசையை முன்னிட்டு டாஸ்மாக் கடைக்கு பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழித்த ஊழியர்: இதுக்குமா! என்று குடிமகன்கள் ஆச்சர்யம் appeared first on Dinakaran.

Tags : Trishti ,Tasmak ,Amavasai ,Poontamalli ,Vanakaram ,Tashmak Liquor store ,Poontamalli Highway, Vanagaram ,Chennai ,
× RELATED மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10-க்கு...